Tuesday, July 21, 2009

சத்யாவின் பட்டறை

நீங்கள் வாரயிறுதி நாட்களில் அண்ணா பல்கலைக்கழகம் அல்லது சென்னைப் பல்கழைக்கழகத்தின் (கிண்டி) வளாகங்களைக் கடந்திருக்கிறீர்களா, அப்படியென்றால் உணவு இடைவேளையின்போது வளாக உணவகங்களில் இவரை நிச்சயம் சந்தித்திருக்கலாம். இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கிடையில் தன்னை மறந்து கைகளால் அபிநயம் பிடித்துக் காற்றில் படம் வரைந்து கொண்டிருக்கிறாரா ஒருவர் அப்படியானால் அவர் 'சத்யா'வாகயிருக்கலாம்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றின் கம்பவுண்டரின் மகனாகப் பிறந்து தெலுங்கு வழியிலேயே பனிரெண்டாம் வகுப்புவரைக் கல்விகற்று, மைசூரின் கல்விக்கான மண்டலக் கல்லூரியில் முதுகலை இயற்பியல் படித்தவர் "சத்யா (எ) சத்யநாராயணன்". பின்னர் "GATE" எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற்று கல்பாக்கம் இந்திரா காந்தி அணுவாராய்ச்சி மையத்தில்(IGCAR) தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டவர். பின்னர் அதே IGCAR'ல் விஞ்ஞானியாகவும் இணைந்தவர். "CHAOS"ல் தனது முனைவர் பட்டத்துக்கான கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார். பின்னர் புரோட்டின்களின் அமைப்பு மற்றும் உயிரியல் மூலக்கூறுகளின் இயக்கம் என அவரது ஆராய்ச்சிகளும் விரிவடைந்தன, இன்றைக்கும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.

இதிலென்ன சிறப்பிருக்கிறது, இந்தியாவில் பலரும் இப்படித்தானே, கிராமத்தில் படித்து பின்னர், வாழ்க்கையில் முன்னேறியவர்கள்தானே என்று உங்களுக்குத் தோன்றக்கூடும். ஆனால், சத்யாவைப் பற்றி இன்னும் இருக்கிறது சொல்வதற்கு.

சென்னை மற்றும் வடதமிழ்நாட்டின் பல கிராமப் புற மாணவர்களுக்கு, இயற்பியல் ஆய்வு மேற்படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கும், தேசிய உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களின் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்காக (CSIR, NET, GATE, IISc, TIFR, IIT, ...) இன்றைக்கும் இலவசமாக பயிற்சியளிப்பவர்தான் சத்யா. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்திலுள்ள, அணுக்கரு இயற்பியல் துறையின் ஒரு வகுப்பறையில்தான் துவங்கியது சத்யாவின் பட்டறை. இவ்வகுப்புகள் துவங்கிய நாட்களில் ஞாயிற்றுக்கிழமை காலைவேளைகளில் மட்டும் நடந்து வந்தன. இலவச வகுப்பு என்பதால் அந்த ஆண்டுக்கான முதல் வகுப்பில் வகுப்பறை நிரம்பி வழியும், எப்படியும் சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் என 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். ஆனால், அப்படியே தேய்ந்து ஆண்டு இறுதியில் சராசரியாக 20 மாணவர்கள் எஞ்சியிருப்பார்கள்.

தொலைவிலிருந்து வரும் மாணவர்களுக்காக, ஞாயிற்றுக்கிழமை மாலை வரை வகுப்புகளை நீட்டித்தார்.
அதில் ஒருவர் வேலூருக்கருகிலுள்ள போலூர் எனும் கிராமத்திலிருந்து அதிகாலை நான்கு மணிக்குக் கிளம்பி 9.30 மணிக்கு வகுப்புக்கு வந்து சேர்ந்து பின்னர் மாலை வகுப்பு முடிந்து பின்னர் நள்ளிரவு நேரத்திற்கு வீட்டிற்கு செல்பவரும் உண்டு. அவரது பயண உழைப்பை அறிந்து கொள்வதற்காக அவருடனேயே ஒருமுறை பயணம் செய்தும் பார்த்தார் சத்யா. அடுத்தடுத்த ஆண்டுகளில், வகுப்பின் இறுதிவரை தொடரும் மாணவர்கள் பெரும்பாலும் புறநகர் மற்றும் கிராமப் புற மாணவர்களாகவேயிருப்பதால், வாரத்தில் இரண்டு நாட்கள் என சனி மற்றும் ஞாயிறு என்று நீட்டித்தார், ஒரு சில மாணவர்களை ஒரு இரவுக்குத் தமது வீட்டிலேயே தங்கிக்கொள்ளவும் உதவிகள் செய்தார்.

இதே போல், நாகர்கோயில் அருகில் ஒரு கிராமத்திலிருந்து வந்த மாணவி முதுகலைப் படிப்பிற்கே போராடித்தான் சேர்ந்திருந்தார். சத்யாவின் வகுப்பிற்குப் பின்னர், இந்திரா காந்தி அணுஆராய்ச்சி மையத்தில் ஒரு விஞ்ஞானியாகச் சேருவதற்கு தேர்ச்சி பெற்றுப் பணியாற்றிவருவதோடல்லாமல், பின்னர் அவரது வாழ்க்கைத் துணையாகவும் இப்போது வகுப்பறைத் துணையாகவும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

வருடத்தில் இரண்டு முறை நடக்கும் CSIR நுழைவுத் தேர்வுகளின் போது சில மாணவர்கள் அவரோடு அவரது வீட்டிலேயே திருவான்மியூரில் தங்கிவிடுவதும் உண்டு. தேர்வு முடியும் வரை அவர்களோடு சேர்ந்து நள்ளிரவு வரை கண்விழிப்பார் சத்யா. பொதுவாக கல்பாக்கத்தில் தனக்காக வழங்கப்பட்ட தனி வீடொன்று இருந்தாலும், தேர்வு சமயங்களில் மாணவர்களுக்காக தினமும் மாலை சென்னையிலிருக்கும் அவரது வீட்டிற்கு வந்துவிடுவார். தனது தாய், தங்கை என மூன்று பேர் மட்டுமே வாழக்கூடிய ஒரு சாதாராண ஓட்டுவீடுதான் சத்யாவினுடையது, ஆனாலும், மாணவர்களுக்காக ஒரு வாரம் அந்தக் குடும்பமே கண்விழிக்கும், உணவு சமைக்கும்.

முதலில், ஞாயிற்றுக்கிழமை காலைகளில் தொடங்கி, பின்னர், ஞாயிறு மற்றும் சனி பகல் வேலை முழுவதுமாக எனப் பரிணமித்து பத்தாண்டுகளைக் கடந்துவிட்டது சத்யாவின் பட்டறை. மேலும், முதலில், தனது வகுப்பறையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகம், பின்னர், இவ்வகுப்பின் வெற்றியையும், மாணவர்களினது ஆர்வத்தையும் கண்டு, பல இருக்கை வசதிகளும், பலகை வசதிகளையும் உள்ளடக்கிய கருத்தரங்குகளுக்கான தனது சிறப்பு அறையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தது. இன்றைக்கும் இவ்வகுப்புகள் இலவசமாகவே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இயற்பியலுக்கான ஒவ்வொரு CSIR தேர்விலும், தமிழகத்தின் மொத்த தேர்ச்சி எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தாலும், அதில் இருவர் கண்டிப்பாக சத்யாவினது வகுப்பு மாணவராயிருப்பர். CSIR தேர்வுகளில் எல்லா தேர்வுகளிலும் அவரது வகுப்பிலிருந்து குறைந்தது ஐந்திலிருந்து பத்து மாணவரைத் தேர்ச்சி பெறவைப்பதையே அவர் அவரது வகுப்பினது வெற்றிக்கான அளவுகோலாக வைத்திருந்தாலும், அவரது பட்டறையின் துவக்க காலங்களில் அவரிடம் பயின்றவர்களுள் சிலர் இன்றைக்கு,IIT, மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் போன்றவற்றில் துணைப் பேராசிரியாரகவும், பலர், இந்திய அரசின் ஆய்வுக்கூடங்களில் விஞ்ஞானிகளாகவும், பல தேசிய ஆய்வுக்கூடங்களில் ஆய்வு மாணவர்களாகவும் பணி புரிகின்றனர்.

இன்னும் பத்தாண்டுகளில் தமிழகத்திலிருந்து இந்தியாவின் பல ஆய்வு நிறுவனங்களிலும் ஆராய்ச்சிக் கூடங்களிலும் இணையும் பலர் சத்யாவின் பட்டறையிலிருந்து வந்தவராகயிருப்பர் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்

மாணவருக்கும், ஆசிரியருக்குமான இடைவெளி கரைந்து நண்பர்கள் குழுவொன்று அறிவியல் விவாதிப்பது போன்ற சூழலை வகுப்பறையில் கொண்டுவருவார். இதுவே அவரின் பலம் அல்லது அந்த வகுப்பறையின் பலம். இவரது மாணவர்கள் பெரும்பாலும், முதுகலை இயற்பியல் படிப்பவர்களே. இவ்விடுகையப் படித்து உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

சத்யா என்று உரிமையோடும் நட்போடும் அழைத்தாலும், அவர் இப்போது ஒரு மத்திய பல்கலைக்கழத்தில் மூத்த விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். ஆம் மாணவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்காகவே கல்பாக்கத்தில் பணியை விட்டுவிட்டு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.


புகைப்படம்: மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் சத்யா.
(புகைப்படம் outlook அங்கில இதழில் திரு ஆனந்த் அவர்களால் வகுப்பரையிலேயே நேர்முகம் காணப்பட்டு வெளிவந்த கட்டுரையிலிருந்து எடுக்கப் பட்டது.)
அவரது வகுப்பு குறித்து டிசம்பர் 2004ல் "outlook" இதழில் வெளிவந்த கட்டுரையின் சுட்டி கீழே.

http://www.outlookindia.com/article.aspx?226027

சத்யாவைப் பற்றிப் பேச இவ்வொரு இடுகை போதாது. ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் உண்டுவிட்டு வெட்டிக்கதை பேசும்போதுதான் சத்யாவைப்பற்றிக் குறிப்பிட்டார் எங்களுக்கு முந்தைய ஆண்டு மாணவரான நண்பர் குருவெங்கட். அன்றிலிருந்து இன்றுவரை ஞாயிற்றுகிழமைகளில் சென்னையிலிருந்தால் சத்யாவின் பட்டறைக்குச் செல்வது என்பது எழுதப்படாத விதியாகவே இருக்கிறது. ஆனால், எல்லா வகுப்பறையிலும் கடைசிபெஞ்ச் மாணவனாகவேயிருந்ததாலோ என்னவோ இந்தப் பட்டறையிலும் கடைசிபெஞ்ச்தான்.

அவரிடம் பயின்ற மாணவரும் எனது நெருங்கிய தோழியுமான ஒருவர் சத்யாவின் தீவிர மாணவியாகி கடும் பயிற்சிக்குப் பின்னர் CSIR தேர்வில் வெற்றிபெற்றுவிட்டு பின்னர் அவரிடம் முடிவைத் தெரிவிக்கும் போது இருவருமே கண்ணீர் மல்க நின்றகாட்சி இன்றும் பசுமையாக இருக்கிறது.

இப்படியான ஒரு உணர்வுப் பூர்வமான தருணத்தை என்னால் உங்களுக்கு வழங்கமுடியாமல் போயிருக்கலாம் சத்யா, ஆனால், ஒவ்வொரு மனிதரது வாழ்க்கையும் அவரவர்க்கு ஒரு கலைக்கூடமெனில், எனது கலைக்கூடத்தின் சுவர்கள் நீங்கள் சத்யா....


Thursday, July 16, 2009

ஆங்கோர் மாணவருக்கு கல்வி உதவி செய்தல்

மின்னஞ்சலில் வந்தது வலையுலக சமூக ஆர்வலர்களுக்காக இங்கே பகிர்கிறேன்.

************************************************************************************
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நம்மில் பெரும்பாலானோருக்கு நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் வகையில் உதவ வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. அப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாமிலிருக்கும் ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் ஒரு வாய்ப்பு. ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக உதவி வேண்டி நிற்கின்றனர். நம்மைப்போலவே ஈழச்சொந்தங்களுக்கு உதவும் நோக்கம் கொண்ட சிலர் (நடிகர் சூர்யா, சத்யராஜ், இயக்குனர் மணிவண்ணன் போன்றோர்) அங்குள்ள சில மாணவர்களைத் தத்தெடுத்து அவர்களுக்கான கல்வி மற்றும் அத்தியாவசியச் செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது நமக்கான பணியாகவும் நம் கண் முன்னே நிற்கிறது. எனவே நமது சமூகப்பணியின் தொடர்ச்சியாக நாம் இப்பணியினை ஏற்று ஒரிரு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது மேற்படிப்புக்கு உதவலாமே என்ற எண்ணம் தோன்றியது. நம் ஆர்குட் தமிழ்க் குழுமமான தமிழக அரசியல் குழுமம்( TNP) நண்பர்கள் சிலருடன் விவாதித்தபோது இதை மிகவும் வரவேற்றனர். இது தொடர்பாக த.நா.அரசியல் குழும நிறுவனர் நண்பர் கோபாலனைத் தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவருக்கும் இத்தகைய எண்ணம் இருப்பதாகக் கூறினர். மேலும், இதன் ஆரம்பமாக ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியைத் தேர்வு செய்து அவர்களது மேற்படிப்புக்கு உதவலாம் என்றும் யோசனை கூறியுள்ளார். அவ்வாறு நாம் உதவும் பட்சத்தில் ஒரு மாணவருக்கு வருடாந்திர கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மற்றும் செலவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதோடு அவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும்வரைத் தொடர்ந்து உதவவெண்டும். சுருக்கமாகக் கூறவேண்டுமானால் நாம் தத்தெடுத்தவுடனேயே அவர்கள் “நமது பிள்ளைகள்” என்றாகிவிடுகின்றனர். எனவே, அவர்களுக்கு முழு உதவியும் செய்ய வேண்டும்.

ஈழத்திற்காக களப்பணியில் நம் தோழர்கள் சிலர் ஈடுபட்டிருக்கையில் கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில் , இந்த ஆண்டில் மேல் நிலை பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்களது மேற்ப்படிப்பை தொடர முடியாத நிலையில்( 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ) இருப்பது தெரியவந்தது ., (கடந்த கல்வியாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் நிறைய பேர் , படிப்பை தொடர முடியாத காரணத்தினால், கட்டட வேலைக்கும்,பெயிண்ட்ர் இன்னும் பலவகை கூலிவேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ..,) அவர்களுக்கு எவ்வகையிலாவது உதவலாம் என்று பல தொண்டு நிறுவங்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கான உதவிகள் கோரப்பட்டுள்ளது .,

நாம் தேர்ந்தெடுத்த பிள்ளைகளின் விபரம்

புவனேசுவரி த/பெ சுப்ரமணியம் , வயது 17 , கும்மிடிபூண்டி.
BE கணினி அறிவியல்
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி
திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்...


நிஜந்தன் த/பெ ரவி, வயது 18 , கும்மிடிபூண்டி
Bsc Bio tech
ஜெயா கலைக் கல்லூரி
திருநின்றவூர்
சென்னை.

இவர்களுக்கான கல்வி கட்டணம்
புவனேசுவரி
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 59,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....

நிஜந்தன்
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 35,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப....
குறைந்தது ஆண்டுக்கு 1.5 லட்சம் தேவைப்படுகிறது. நான்கு ஆண்டுகள் என்றால் 6 லட்சம் ரூபாய். பெரியதொகைதான். ஆனால் நம்மில் பலர் ஒன்றாய் இணைந்தால் இது அவரவர் பங்குக்கு சிறு தொகையாகவே வரும். நாம் உறுதியாக நான்கு வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வுதவியை தமிழக அரசியல் குழுமத்தின் மூலம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

அதை ஒரு அரசு சாராத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றினைத் தொடங்கி அதன் மூலம் இது போன்ற உதவிகளைச் செய்யலாம் என்று எண்ணுகிறோம். அதைத் தொடங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.

அதற்கு முன் கல்லூரிகள் திறக்க இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தமிழக அரசியல் குழும நிர்வாகியான சக்திவேல் அவர்களின்( http://www.orkut.co.in/Main#Profile.aspx?uid=898104197585368552 ) வங்கிக் கணக்கு மூலம் முதலாவது தவணை உதவியைப் பெறலாம் என்று எண்ணுகிறோம். அவரது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விபரம் கீழே:

C Sakthivel
ICICI account no: 620401064769
Branch: Contonment Branch, Trichy


SWIFT CODE: ICICINBB

Bank code: 6204


மேலும் வரைவோலை, மற்றும் பணப்பட்டுவாடா அனுப்புபவர்கள் நண்பர் தயாளனின் விலாசத்திற்கு "C.Sakthivel" என்ற பெயரிலேயே அனுப்பலாம். அவரது விலாசம் கீழே

D. Dhayalan (தொடர்புக்கு : 9841150700)
B/GF, Kasi Arcade Annex-1
32/1, VOC Street
Kaikan Kuppam (Near Chennai Medical Center)
Valasaravakkam - Post
Chennai - 600087


தங்கள் மூலம் ஈழத்துச் சிறார்களின் கல்வி விளக்கேற்ற ஒரு உதவி அது சிறு துளியாய் இருந்தாலும், அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

குறிப்பு:

கும்மிடிப் பூண்டி ஏதிலி முகாமில் இது போன்ற பலர் தங்கள் மேற்கல்விக் கனவுகளோடு, மண் சுமந்து கொண்டும், கலவை கலந்து கொண்டுமிருக்கிறார்கள். தங்களிடம் வைக்கும் வேண்டுகோள் இது தான். தங்களால் ஒரு மாணவனுக்கோ, அல்லது மாணவிக்கோ அவர்களது மேற்கல்விக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் வசதியும், பெரிய மனதும் இருந்தால் தாங்கள் கும்மிடிப்பூண்டி ஏதிலி முகாமைத் தொடர்பு கொள்ளலாம். என்னைத் தாங்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அதன் முகவரியும், தொலைபேசி எண்ணும் வாங்கித் தருகிறேன்.

"அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவினும் புண்ணியங்கோடியாம்
ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்
"

என்பார்கள். அதனைச் செயல் படுத்த ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.
உதவி உயருவோம்..!!!!!

எதிர்பார்ப்பு கலந்த நன்றியுடன்


தமிழக அரசியல் குழுமம் சார்பாக

த.சுரேஷ்

பின் குறிப்பு:
இதைத் தங்கள் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

இதைப் பற்றிய விவாதத்தினை காண http://www.orkut.com/Main#CommMsgs.aspx?cmm=7222740&tid=5357422439875434097&start=1
--
C.Sakthivel ( தொடர்புக்கு: 9843283778)
Research Scholar
School of Chemistry
Bharathidasan University
Tiruchirappalli-24, India
E-mail: skvchem@yahoo.com , skvchem@gmail.com

*************************************************************************************

ஈடுபட்டுள்ளோரின் முழு விபரமும் இங்கே உள்ளது. அவர்களைத் தொடர்பு கொண்டு பின் ஆவன செய்யலாம்.


நன்றி