Monday, August 11, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை


ஆன்மீகம் - கிரகிப்பு - I முந்தய பதிவின் தொடர்ச்சி.

"மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு." - இத்தொடரின் கருப்பொருளாகயிருப்பதால் மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.


II.ஆன்மீகம் - இயற்கை.
ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்பது ஒரு தேடல், மெய்யியல் அல்லது உண்மை குறித்தான தேடல் என்று பரவலான வரையறையாக ரிக் வேதம் முன்வைப்பதாகக் கூறுகின்றனர்[1]. ஆன்மீகவாதி அல்லது சாது என்பவன், முதலில் அனைத்தையும் துறக்கவேண்டும், அதாவது பொருள் என்று தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் இருத்தல், மிகக்குறைந்த பட்ச ஆடைகளை அணிதல் அல்லது முழுவதுமாக ஆடைகளைத் துறத்தல், பூசனைகளைத் துறத்தல், மதம், மொழி, இனம் என அனைத்தையும் சாராமல் (பற்றில்லாமல்) இலக்கை நோக்கிய தேடலை மேற்கொள்ளுதல். உலகத்தின், உண்மையைத் தேடுதல், மற்றும் உலக மக்களுக்கு தாம் உணர்ந்த உண்மைகளைப் பற்றி அறியத்தருதல்.[1] ஆன்மீகம் ஒரு முழுமை (perfection) மற்றும் முந்நிர்மாணிக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு (pre-determined), இயக்கங்கள் அனைத்துக்குமான ஒற்றை நோக்கம் மற்றும் ஒற்றை மூலம் போன்ற கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது.
எப்படியும் ஆன்மீகம் என்பது ஒரு முழுமையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆன்மீகம் என்பது இயற்கையுடன் இரண்டறக் கலப்பது அல்லது இயற்கை என்ற ஒரு முழுமைதான் ஆன்மீகம் போன்ற கருதுகோல்கள் உலாவுகின்றன. இவ்வான்மீகக் கருத்து கால மாற்றங்களாலும் சமூகச் சூழல் மாற்றங்களாலும் எப்படி மாறியது அல்லது மாற்றப்பட்டது என்பது பிரிதொரு ஆய்வுக்கான கருப்பொருள். ஆன்மீகம் என்பது ஒரு முழுமையென்றால், இயற்கை ஒரு முழுமையல்ல, தவறுகள் இழைத்து பின் திருத்திக்கொள்ளும் ஒரு சீரற்ற நிகழ்வே உயிரிகள் சார்ந்த இயற்கை. ஆதலால், ஆன்மீகம் என்பது இயற்கையோடு இணையும் ஒரு நிகழ்வு என்று குறிப்பிடுவது முற்றிலும் புறந்தள்ள வேண்டிய ஒன்று.

இயற்கை என்பது என்ன? இயற்கை ஒரு முழுமையா... என்றால் நிச்சயமாக இல்லை. இயற்கை சூழ்நிலைகளின் மாற்றத்திற்கிணங்க, சீரற்ற (random) மற்றும் நிகழ்தகவின் (probablistic) அடிப்படையில், இயங்கும் ஒன்று. நமது உடல் தோன்றியது ஒரு நிகழ்தகவு, ஆயிரம் விந்துக்களில், இரண்டாவதிருக்கும் விந்து முந்தியிருந்தால், இப்போதிருக்கும் “நாம்” “நாமாக” இருந்திருக்க முடியாது. இப்போதிருக்கும் நாம் தோன்றியதற்கான நிகழ்தகவு ஏறத்தாழ 1/சிலஆயிரம். பூமியின் கருப்பொருளில் சிறு மாறுபாடு இருந்திருக்குமானால், உயிரே தோன்றியிருக்க முடியாது. ஒரு உதாரணத்திற்கு இவ்வண்டத்தில் ஓராயிரம்கோடி கோள்கள் இருக்குமானால், உயிர்தோற்றத்தின் தற்போதைய நிகழ்தகவு குறைந்த பட்சமாக 1/ ஓராயிரம்கோடி.


இப்படிப்பட்ட இயற்கை, சூழல் மாற்றத்திற்கிணங்கப் பல தவறுகளைச் செய்யக்கூடியது.(சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்) அப்படிப்பட்ட தவறுகளைப் பின்னர் திருத்திக் கொண்டு, மேலும் உயிரியில் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே வந்த பரிணாமக் கிளைகளில், பரிணமித்த ஒரு சிறு கிளை உயிரியாக நாம் இருக்கிறோம். அப்படியானால், இயற்கை என்பது முழுமையள்ள, சூழலுக்கு ஏற்றார்போல் மாறுவதும், தவறிழைப்பதும் (சூழலுக்கு ஒவ்வாத அல்லது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றை உருவாக்கி பின் அழித்தல்), திருத்திக்கொள்வதுமான ஒரு நிகழ்வாகவே உயிர்கள் சார்ந்த இயற்கை இருக்கிறது.
ஒருவேளை, மனிதன் தனது ஆன்மாவின் உன்னதத்தால், முற்றுமுணர்ந்திருந்தாலும், பூமிக்கு ஆயிரம் மைல் அருகில் ஒரு எரிகல் வந்தாலும், அதன் சூழல் விளைவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பலவைகையான உயிரிகள் இல்லாமல் போய்விடும். பேரண்டத்தின் சூட்சுமத்தை உணர முற்படும் தன்மையுள்ள ஒரு உயிரியைத்(மனிதனைத்) தாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று பூமி, அதற்கான எதிர்வினையைப் புரியாமலிருக்காது.


கால்களில் மோதும் நுரைத்த கடலலை, வானும், கடலும் இணையும் மாயப்புள்ளி, பரந்தவெளியில் தனித்திருக்கும் ஒற்றை மரம், அதிகாலைக் கதிரவன், தென்றலும் நிலவும் மட்டுமே துணைக்கிருக்கும் ஆற்றங்கரை மெளனம், மாலையின் தனிமையில் சுழலும் பறவைகளின் இசை, உதிர்கின்ற சருகு, குழந்தையின் சிரிப்பு, ஒரு சவம், எனப் பல கணங்களில் ஒரு வெறுமையும் நம்மைச் சுற்றியிருக்கும் பல கற்பிதங்களும் கட்டமைப்புகளும் கலைந்திருக்கலாம். அந்நொடிப்பொழுதின் போதைக்கான ஈர்ப்பு, அதன் நீட்சிக்கானத் தேடலின் துவக்கப் புள்ளியாகயிருக்கலாம். (இவ்வெடுத்துக்காட்டுகள் கூட எனது சூழல் மற்றும் கிரகிப்புத்தன்மை சார்ந்தவையே )

ஆனால், இவையணைத்தும் இயற்கையின் முன் நாம் சிறுத்துப் போகும் கணங்களேயன்றி அதனோடு இணைந்த கணங்களல்ல.

தற்போது மனிதன் பரிணமித்திருக்கும் ஒரு நிலையில் அவன் மீண்டும் இயற்கையுடன் இணைவது முற்றிலும் இயலாத காரியம். இயற்கையுடன் இணைவதில் முதல் படியாக மனிதன் ஆடைகளைக் களைய வேண்டும், உணவை உற்பத்தி செய்யாமல், இயற்கை உருவாக்கும் உணவை மட்டுமே நம்பியிருக்க வேண்டும், இயற்கைச் சூழலுக்கேற்ப தனது வாழ்விடத்தையும், வாழ்க்கைமுறையையும் மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். மேற்கூறிய எதுவுமே தற்போது பெரும்பாண்மையான மனிதயினத்திற்கு விருப்பமிருந்தாலும் சாத்தியமில்லாத ஒன்று.(ஒருவேளை, ஆப்பிரிக்க, தென்னமெரிக்கா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் வெகுசில ஆதிவாசிக் குழுக்களுக்கு சாத்தியமாகயிருக்கலாம்).


உயிரியல் சார்ந்த இயற்கையில், மனிதன் இவ்வகைச்செயல்பாடுகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டதனாலேயே பரிணாமக் கிளையில் மனிதன் எனும் விலங்கின் இறுதியான புள்ளியாகத் தற்போதைய மனிதன் கருதப்படுகிறான்.


ஒரு ஆன்மீகவாதி முதலில் செய்ய வேண்டியது தன்னிடம் இருக்கும் அனைத்தையும் துறத்தல், மிகக்குறைந்த பட்சமான உடையைக் கொள்ளுதல் அல்லது முழுவதுமாகவோ துறத்தல்[1]. ஆனால், ஆன்மீகவாதி அல்லது ஆன்மீகம் என்பது இவ்வொரு காரணி மட்டுமல்ல என்பதால், இவ்வொரு கருத்தை மட்டும் வைத்து ஆன்மீகவாதி இயற்கையோடு இயைந்தவனாகக் கருதயியலாது. ஒரு வகையில், மனிதனை உயிர்ச் சார்ந்த இயற்கைச் சூழலிருந்து புறந்தள்ளி, வெளியேற்றியதே இந்த ஆன்மா, மனது ஆகிய கருத்தாக்கங்கள்தான். அதனால், மனிதனுக்கும் உயிர் சார்ந்த இயற்கைக்கும் இடையே இருந்த இடைவெளியை அதிகப்படுத்தியது ஆன்மா, குறித்த கருத்துக்கள்.

தமக்கான உணவை உற்பத்தி செய்துகொண்டதன் மூலம் அடுத்த கட்டமாக மனிதன் எனும் விலங்கு இயற்கையிலிருந்து தன்னைப் பெரிதும் அந்நியப்படுத்திக் கொண்டது.

சமூகம், உணவு உற்பத்தி போன்ற செயல்பாடுகளிலிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் ஆன்மீகம், உயிரியின் இனப்பெருக்கம் என்ற மற்றொரு மிகவும் அடிப்படையானதொரு இயற்கை நிகழ்வைப் புறந்தள்ளியதன் மூலம் உயிர் சார்ந்த இயற்கையிலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொண்டது என்றுதான் கருதவேண்டும்.

ஆனால், ஆன்மீகம் பெரிதும் பேசும் இயற்கை என்பது பேரண்டத்தைப் பற்றியது, உயிரற்ற கோள்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கங்களும், தோற்றமும் குறித்தானது. இதன் மூலம் நமக்கும், இப்பிரபஞ்சத்திற்கும் ஒரு நேரடி ஆற்றல் பரிமாற்றம் பற்றிய கதையாடலாக இருக்கிறது. அதாவது உயிர் சார்ந்ததாகயில்லாமல் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் இயக்கம் குறித்தான தேடலாக இருக்கிறது. அண்டத்தில் திளைத்து பிண்டத்தைத் மறக்கும்/துறக்கும் ஒரு கதையாடல். ஆனால், இயற்கை அனைத்தையும் உள்ளடக்கியது, உயிரிகள் உட்பட. (இப்புள்ளிக்கும் மீண்டும் வருவோம்).


[1].The sadhus and Indian civilization - Vijay prakash sharma, Amol publications, NewDelhi (1998).

Sunday, August 10, 2008

ஆன்மீகம் - கிரகிப்பு - I


இதுபோன்ற கட்டுரைகளை எழுதத்தான் வேண்டுமா, என்ற அயற்சியினூடே பலகாலமாக இதுபோன்ற பேசுபொருட்களிலிருந்து விலகியேயிருந்தாலும், எனக்குள்ளிருக்கும் சாத்தான் “இருள் பரவட்டும்” என்ற நோக்கில் எனது கணினியையும் எனது நேரத்தையும் எடுத்துக்கொண்டது. அதனால், போற்றுதலும் தூற்றுதலும் போகட்டும் இறைவனை வாழவைக்கும் சாத்தானுக்கே.[1]


இக்கட்டுரை அறிவுரையுமல்ல, அறவுரையுமல்ல, ஒரு உரையாடல்.

கடவுள் - இந்த ஒற்றை வார்த்தை செய்யும் ஜாலம் உண்மையில் வியக்க வைக்கிறது. இவ்வார்த்தை வெறும் வார்த்தையல்ல, மொழியின் உணர்வு ரீதியிலான ஆளுமையை சர்வ வல்லமையுடனும், வீச்சுடனும் தெரியப்படுத்தும் ஒரு வார்த்தை. இவ்வார்த்தையும், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளும் (அல்லது அவ்வார்த்தையின் போர்வைக்குள்) மட்டுமே தற்போதைக்கு, உலகின் பெரும்பாலான வன்முறைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமென்று கூறலாம்.

கடவுள் - சர்வவல்லமை படைத்த படைப்பாளி, ஆதியிலிருந்து அந்தம் வரை அனைத்துப் பருப்பொருட்களும் எவ்வாறிருக்கும் அல்லது இருக்கவேண்டும் என்ற வரையறையை வகுத்தவன்(ள்). ஆனால், யாரும் கண்டறியமுடியா உருவமுமில்லா, வரையறையுமில்லாத ஒன்றாக குவார்க்குகளுக்கும் (quarks - அணுவின் உட்கருவுக்குள்ளிருக்கும் துகள்) நெபுலாக்களுக்குமிடையே (nebulas - பேரண்டத்தில் இருக்கும் அடர்வான ஹைட்ரஜனைப் பெரிதும் உள்ளடக்கிய வாயு) கூடுவிட்டு கூடு பாய்ந்து கொண்டிருக்கும் அச்சர்வவல்லமை. உருவமில்லாதது என்றவுடனேயே, கோயில்களுக்குள் இருக்கும் உருவங்களெல்லாம் வெறும் கலைவடிவங்களாகவும், அக்கற்சிலைகளைவிட அதைச் செதுக்கிய சிற்பி அதிக மதிப்பையும் பெற்றுவிடுகிறான் என்பதுதான் உண்மை. அப்படியானால் உருவம் கொடுத்த படைப்பாளி சிறந்தவனாகிவிடுகிறான். அது அவனது உணர்தலுக்கான உருவமெனில், அதே கடவுளரை நிர்வாணமாக உணரும் ஒரு படைப்பாளி நாடு கடத்தப்படவேண்டியவனாகவோ அல்லது தேசத்துரோகியாகவோ சித்தரிக்கவேண்டிய அவசியமில்லையென்றாகிறது, அல்லது, அப்படிச் சித்தரிக்கப்படவேண்டிய நிர்பந்தத்தின் பின்னிருக்கும் பக்தி கேள்விக்குறியதாகிறது. (இப்புள்ளிக்கு மீண்டும் வருவோம்)

குவார்க்குளையும், நெபுலாக்களையும், கடவுள் படைத்தானா? என்ற விடை தெரியாத கேள்வி ஒரு புறமிருந்தாலும், உயிரையும் உயிருள்ளவற்றையும் படைத்தது கடவுள் அல்ல என்பது ஆய்வகங்களிலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது[2]. அப்படியானால், உயிருள்ளவற்றுக்கு கடவுள் தேவையில்லை, ஏனெனில் அவற்றைக் கடவுள் படைக்கவில்லை. உயிரற்ற குவார்க்குக்கும், நெபுலாவுக்கும் ஒருவேளை நன்றிக்கடனாக அது (கடவுள் என்ற கருத்தாக்கம்) தேவைப்படலாம்.

உருவமுள்ள மற்றும் ஓரிடத்தில் அமர்ந்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முப்பணிகளைச் செய்யும் கடவுளே அவசியமற்றதாகிவிட்டது எனும்போது அதனைச் சுமந்துகொண்டிருக்கும் மதங்களும் மத அடையாளங்களும் குப்பையில் வீசப்பட வேண்டியவையாகிவிடுகிறது. அதனால், முப்பணிகளைச் செய்யும், உருவமுள்ள கடவுள் மற்றும் மதம் ஆகிய இரண்டுவார்த்தைகளையும் அதனுடன் சேர்ந்த விவாதங்களையும் இப்போதே புறந்தள்ளிவிடலாம். அவை அயற்சி தருபவை. ஆன்மீகக் கருத்துக்களையும், சிந்தனைகளையும் குறித்த உரையாடலாகத் தொடரலாம்.

“ஆன்மீகம்”, ஒரு அதிர்வை நம்மைச் சுற்றி உருவாக்ககூடிய வார்த்தை, நமக்கும் இப்பிரபஞ்சத்திற்குமிடையே உள்ள தொடர்பை அற்ப மானிடருக்குப் புரிய வைக்கும், கடவுளுக்கிணையான மற்றொரு வார்த்தை. இப்படியான கருத்துருவாக்கத்துக்குப் பின்னிருக்கும் கலாச்சாரம், சமூகச்சூழல், அரசியல், அறிவியல், மாயப் பிம்பங்கள், உணர்வுகள் என இது குறித்தான உரையாடலைத் தொடர்வோம்.

“ஆன்மீகம்” - முழுமையை நோக்கிய தேடல், ஒருமுகப்பட்ட சிந்தனை, அல்லது வெறுமையை நோக்கிய பயணம், ஆன்மாவின் உன்னதத் தேடல், ஒரு வகையான உயரிய உணர்வு, பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் இயக்கத்தையும் நடத்தும் ஒற்றைச் சக்தி மூலத்தை உணர்தல், நமக்கும் அண்டவெளிக்குமிடையே ஒரு தொடர்பை உணரச்செய்பவை, மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, செழுமைப்படுத்தும், முழுமைப்படுத்தும் ஒரு உணர்வு ... என அடுக்கிகொண்டே போகலாம். இவ்வார்த்தையின் வாழ்வாதாரமே அது தெளிவான வரையறையற்றிருப்பதுதான் அல்லது வரையறுக்கமுடியாதது என்ற வரையறையைச் சுமந்து கொண்டிருக்கும் ஒரு முரண்.

மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு என்ற திசையில் உரையாடல் தொடரும்.